/indian-express-tamil/media/media_files/2024/11/11/VjcZKiuLCYiEuW5wFm8k.jpg)
வங்கக்கடலில் வரும் நவம்பர் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. எனினும், இந்த பருவமழை தீவிரம் அடையாமல் இருந்து வருகிறது. மேலும், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி பருவமழை தீவிரம் அடையும் எனக் கூறப்பட்டது.
ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இது மூன்று முறை தள்ளிப்போய், கடந்த 11-ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவானது. இந்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லை. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 2 நாள்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி வரும் பட்சத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்த 2,3 நாள்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.