மதுரையில், பூனைக் கடிக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். சில நாட்களுக்கு முன்பு வீட்டில் வளர்க்கும் பூனை ஒன்று பாலமுருகனை கடித்தது. முதலில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாலமுருகன், பின்னர் வலி அதிகரித்ததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு, ரேபிஸ் சிகிச்சை வார்டில் பாலமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில நாட்களாக கடும் வலியால் அவதிப்பட்டு வந்த பாலமுருகன், இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொடர் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் இன்று (ஏப்ரல் 26) தனி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சடலம் உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.