மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்காக வாடிவாசல் சுற்றி மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் மேடை மீது டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்கள் பதாகைகளை வைத்து SAVE ARITTAPATI' என டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான முழக்கத்தையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பினர்.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கான ஏல அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜன.7 ஆம் தேதி பல்வேறு அமைப்புகளின் சார்பில் மேலூரில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரளால் போராட்டம் பெரும் வெற்றி பெற்றதாக போராட்டக்காரர்களால் அறிவிக்கப்பட்டது.
பேரணியை தொடர்ந்து தற்போது மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் சுரங்க எதிர்ப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. மேடை மீது ஏறி அரிட்டாப்பட்டியை பாதுகாப்போம் என வலியுறுத்தும் Save Aritrapati' என எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு சமூக ஆர்வலர்கள் முழக்கம் எழுப்பினர்.
மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணவந்த பார்வையாளர்கள் மேடையில் பொதுமக்கள் எதிர்ப்பு பதாகைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட்டனர். போராட்டங்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கின்ற நிலையில், ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் மேடையில் இந்த எதிர்ப்பு பதாகைகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.