விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆதவ் அர்ஜுனா. இவர் தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தி.மு.க குறித்தும், அக்கட்சியுடனான கூட்டணி குறித்தும் பேசி இருந்தார். அதில் அவர் அமைச்சர் உதயநிதியை குறி வைத்து, ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா?' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், 'வி.சி.க கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் தி.மு.க வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், தமிழக அமைச்சரவையில் வி.சி.க, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும்' எனப் பேசியிருந்தார். அவர் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை நீலகிரி தொகுதி எம்.பி-யும், தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் குறித்து கேள்விகள் எழுப்பட்டன. அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், "மதவாதத்தை ஒழித்து, சமூக நீதியை காப்பதில் தி.மு.க-வுடன் தோள் கொடுக்கும் அரசியல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் உள்ளனர்.
இடதுசாரி சிந்தனையில் இருந்து, சிறிதும் வலுவாமல் திருமாவளவன் உள்ளார். இந்தச் சூழலில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை, அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர், கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறனுக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. வி.சி.க இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனின் ஒப்புதலோடு இதனைப் பேசியிருக்க மாட்டார். திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார். விடுதலைச் சிறுத்தைகளும் இதனை ஏற்க மாட்டார்கள்.
கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் கேட்பது நகைப்புக்குரிய ஒன்று. இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு சரியாக வராது. இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பா.ஜ.க-விற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“