இன்றும் நாளையும் (மே 29, 30) ஆகிய தேதிகளுக்கு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவின் பல பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது. மேலும், வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது வலுப்பெற சாதகமான சூழல் நிலவுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக பலத்த மழையுடன், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பதிவாகியுள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்காள விரிகுடாவில் (ஒடிசா கடற்கரைக்கு அப்பால்) உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற சாதகமான சூழல் நிலவுகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 நாட்களில் பதிவான மழைப்பொழிவு விவரம்:
அவலாஞ்சி (நீலகிரி) – 108
எமரால்டு (நீலகிரி) – 70
அப்பர் பவானி (நீலகிரி) – 50
பந்தலூர் (நீலகிரி) – 40
சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) – 70