திருப்பூரில் 24 மணிநேரமும் இயங்கி வரும் டாஸ்மாக் பாரை கண்டித்து இளம் பெண் கத்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல டாஸ்மாக் பார்கள், 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இதனால், தினம் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது என கண்ணீர் வடிக்கிறார்கள் பெண்கள்.
இந்நிலையில் திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணான கவிதா, கையில் கத்தியோடு போராட்டத்தில் ஈடுபட்டார். பாண்டியன் நகரில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் பாரை கண்டித்து, அதன் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவிதா, “யாரும் குடிக்க செல்லாதீர்கள், மீறினால் கத்தியால் குத்திவிடுவேன். இல்லையெனில் என்னை நானே குத்திக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வேன்” என சத்தம் போட்டார்.
இதனையடுத்து, தனியார் பாரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை, போலீஸார் பறிமுதல் செய்ததோடு, கவிதாவையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
“எனக்கு 2 குழந்தைகள். என் கணவர் தினமும் காலையிலேயே குடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் படுத்துக் கொள்கிறார். இதனால் வருமானமின்றி குழந்தைகளை வளர்க்க சிரமப் படுகிறேன். என்னைப் போன்று பல பெண்களும் இந்த 24 மணி நேர டாஸ்மாக்கால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். ஆகையால், 24 மணி நேர மது விற்பனையை உடனே குறைக்க, கலெக்டர் ஆவண செய்ய வேண்டும்” என போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் கவிதா.
குடிக்கு அடிமையாகியிருக்கும் ஆண்கள் தங்கள் வீட்டு, பெண்களை நினைத்து தாங்களே திருந்தினால் ஒழிய, மது விற்பனை நிலையங்கள் கணிசமாகக் குறையும்.