காளையார்கோவில் அருகே உள்ள நெடுவத்தாவு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (29) என்பவருக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று அவர் தனது நண்பர் மரக்காத்தூர் சிவசங்கர் (28) என்பவருடன் இருப்பான்பூச்சி என்ற பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில் சரத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவசங்கர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரத்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனுடன் தொடர்புடைய ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில், கொலை சம்பவத்தில் காயமடைந்த சிவசங்கரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து, மதுரை தொண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.