Aavin milk procurement price selling price hiked : நம்முடைய அன்றாட வாழ்வில் நீங்காத அங்கமாக மாறியேவிட்ட உணவுப் பொருட்களில் முக்கியமானவை தேநீர், காஃபி, பால் போன்றவை. பெரியவர்களை விட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினை சரி செய்வதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது பால். தமிழக அரசின் ஆவின் பாலை வாங்குவது தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒன்று.
Aavin milk procurement price selling price hiked உயர்த்தப்பட்ட விலை
பசும் பால் கொள்முதல் விலை - 4 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ. 32 வழங்கப்படும்
எருமைப் பாலின் கொள்முதல் விலை - 6 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ.41 வழங்கப்படும்
நுகர்வோருக்கான விலை
ஆவின் பால் விற்பனை லிட்டருக்கு ரூ. 6 அதிகம்.
ஆவினின் 4 ரக பாலின் தற்போதைய விலை மற்றும் மாறுதலுக்கு உள்ளாக இருக்கும் விலை
இந்த புதிய விலையின் படி, நீல நிற பாக்கெட்டில் வரும் ஆவின் பால் (டோன்ட் மில்க்) தற்போது லிட்டருக்கு ரூ.37 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. புதிய அறிவிப்பின் படி நாளை முதல் ரூ.43க்கு விற்பனையாகும்.
டபுள் டோன்ட் மில்க் (The double toned) என்று இளம்சிவப்பு நிற பாக்கெட்டில் வெளியாகும் பாலின் தற்போதைய விலை ரூ. 34. நாளை முதல் ரூ.40க்கு அவை விற்பனை செய்யப்படும்.
ஸ்டேண்டர்டைஸ்ட் மில்க் (Standardized Milk) எனப்படும் பச்சை நிற பாக்கெட்டில் வரும் பாலின் விலை ரூ.41 ஆகும். நாளை முதல் ரூ. 47க்கு விற்பனை செய்யப்படும்.
ஆரஞ்சி நிறத்தில் வரும் ஃபுல் க்ரீம் (Full Cream) ரக பால் தற்போது ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை முதல் ரூ.51க்கு விற்பனை செய்யப்படும்.
தொடரும் எதிர்ப்புகள்
முன்பெல்லாம் அடிக்கடி பால் பொருட்களின் விலை உயரும். முறையான விலை தரவில்லை என்று பால் உற்பத்தியாளர்களும் பாலை சாலையில் ஊற்றி போராட்டம் நடத்துவார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று பாலின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை இரண்டையும் உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு. முழுமையான விலைப்பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என ஆவின் சேர்மென் கே.காமராஜ் அறிவித்துள்ளார்.
பாலின் கொள்முதல் விலை அதிகரிப்பதால் விற்பனை விலையும் அதிகமாகிறது. பால் மட்டுமல்லாமல், தயிர், மோர், பனீர், சீஸ், நெய், வெண்ணெய் போன்ற பால் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பால் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலையும் நிச்சயமாக அதிகரிக்கும்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு முக ஸ்டாலின், தினகரன், கனிமொழி உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் உடனே இந்த விலையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது லிட்டருக்கு ரூ.10 வரை பாலின் விலை உயர்த்தபப்ட்டு குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆவினின் பிரதான சந்தையாகும். 12 லட்சம் லிட்டர் பால் ஒரு நாளைக்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு பாலின் எம்.ஆர்.பி. விலையில் இருந்து ரூ.3 குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் பெரும்பாலான குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு சற்று கூடுதல் சுமையை உருவாக்கும்.