சென்னையில் இருந்து அதிக பயணிகளை கொண்டு செல்வதற்காக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில், ஏசி III அடுக்குப் பெட்டிகளுக்குப் பதிலாக, ஏசி III அடுக்கு எகானமி கிளாஸ் பெட்டிகளை தெற்கு ரயில்வே மாற்ற முடிவு செய்துள்ளது.
ரயில்வே நிர்வாகத்தின் இந்த அவசர நடவடிக்கையினால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதை பற்றி முன்கூட்டியே தெரிவிக்காததால் மக்கள் சார்பில் புகார்கள் எழுகிறது.
ரயில்வேயின் இந்த புதிய முடிவினால், ஏசி III அடுக்கு பெட்டிகளில் 72 பயணிகள் பயணிப்பதற்கு பதிலாக 80 பேர் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
சென்னை- புது டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் பெட்டிகளில் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எந்தெந்த ரயில் சேவைகளில் முன்பதிவுகள் அதிகம் உள்ளதோ அங்கு இம்முயற்சி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே AC III இல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகள், எந்தவித அறிவிப்புமின்றி AC III எகானமிக்கு மாற்றப்படுகிறார்கள்.
ஏசி III அடுக்கிற்கு ஏற்கனவே முன்பதிவு செய்த மக்களை, தற்போது ஏசி III அடுக்கு எகானமி கிளாஸ்-க்கு மாற்றுவது பயணிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது. செலுத்திய பணத்திற்கு தரம் குறைத்து கொடுக்கப்படும் படுக்கை என்று சிலர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எகானமி வகுப்பு மலிவானது என்பதால், மீதம் உள்ள ரயில் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் திருப்பி கொடுத்தாலும், எதிர்பார்த்து செல்லும் வசதியை பெறமுடியாததை மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil