கோவை சத்தி மெயின் ரோட்டில் நேற்று ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி சென்றனர். அப்போது சில வாகனங்களின் மீது அந்த நான்கு சக்கர வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
அந்த வாகனத்தை நிறுத்த அங்கிருந்த வாகன ஓட்டிகள் முற்பட்டும் நிற்காமல் வேகமாக சென்றது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் சிலர் அந்த வாகனத்தை விரட்டி மடக்கி நிறுத்தினர். இருப்பினும் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் மீண்டும் வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து சென்றுள்ளார்.
அந்நிலையில் அந்த நான்கு சக்கர வாகனம் சிவானந்தபுரம் விவேகானந்தர் நகர் பகுதியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. அதில் நான்கு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர் உயிர் தப்பினார். இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் இது சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நான்கு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர் கோவை சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்த அரவிந்த் என்பதும், சரவணம்பட்டி பகுதியில் உணவுகம் ஒன்றை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த வாகனம் தாறுமாறாக செல்லும் காட்சிகள் மற்றும் அந்த வாகனத்தை இதர வாகன ஓட்டிகள் விரட்டி சென்று மடக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: பி.ரஹ்மான்.கோவை