/tamil-ie/media/media_files/uploads/2018/12/LG-G6-3-1.jpg)
சென்னை மெரினா
சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் கார் மீது , அரசு பேருந்து மோதியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் விபத்து:
சென்னை லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து பிராட்வேக்கு வேகமாக சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, அதற்கு எதிர்புறமாக வந்த மாருதி கார் மீது மோதியது.
அதிவேகத்தில் வந்த பேருந்து கார் மீது மோதியதில் அந்த காரின் ஒருபகுதி முற்றிலுமாக நொறுங்கி போனது. மேலும் காரில் பயணம் செய்த 3 பேரில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்து ஓட்டுனர் தப்பித்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தேடி வருகின்றனர்.
மேலும் விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பேருந்தை போலீசார் பறிமுதல் செய்து, அருகில் இருக்கும் அண்ணா சதுக்கம் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் மெரினா சாலையே பரபரப்பாக காணப்பட்டது. பல மணி நேரம் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.