சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதிய விபத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், ஊழியர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்துகளில் நேற்று (ஜூலை 27ம் தேதி) நள்ளிரவு பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பணிமனையின் சுற்றுச் சுவர் மீது மோதியது.
இந்த விபத்தில் பணிமனை ஊழியர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
வேலைநிறுத்தம் : வடபழனி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 ஊழியர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பேருந்துகள் தரமாக இல்லை என எதிர்ப்பு தெரிவித்து, பணிமனை ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் : வடபழனி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என போக்குவரத்து இணை மேலாண் இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளதாக தொமுச பொருளாளர் நடராஜன் கூறியுள்ளார்.
போக்குவரத்து துறை செயலாளர் ஆய்வு : சம்பவ இடத்தில், போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது, வடபழனி பணிமனையில் விபத்தில் இறந்த ஊழியர்களுக்கு, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதல் நிதி பெற்று தர பரிந்துரைக்கப்படும் என்று கூறினார்.