/indian-express-tamil/media/media_files/2025/09/22/duraimurugan-supreme-court-2025-09-22-22-11-01.jpg)
இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் (2006-2011), வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி மீது 2011-ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், 2017-ம் ஆண்டில் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
ஆணால், இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை மேல்முறையீடு செய்ய, வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கு மீண்டும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2024-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி வழக்கை மீண்டும் வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரினார். ஆனால், இந்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, இருவருக்கும் பிடி ஆணை பிறப்பித்தது.
இதற்கு எதிராக துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, நீதிபதி விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து இருவருக்கும் விலக்கு அளித்தார்.
இதற்கிடையில், இருவரையும் விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக துரைமுருகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.