கோவை உக்கடம் அடுத்த கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் 'ஒற்றை ஓநாய் தாக்குதல்' (Lone wolf attack) முறையை ஒத்தியிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை உக்கடம் அடுத்த கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே தீபாவளி முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓடும் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் சம்பவம் இடத்திலிருந்து ஆணி, கோலிக்குண்டு உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைந்து விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்தவர் ஜமோசா முபின் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டை சோதனை செய்தபோது, 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான தொடர் விசாரணையில் ஜமோசா முபீனின் உறவினர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை தேவாலய தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு வழக்கை என்.ஐ.ஏ.விற்கு மாற்ற பரிந்துரை செய்தது. அதன் பேரில் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை கார் வெடிப்பு சம்பவம் 'ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை ' (Lone wolf attack) முறையை ஒத்திருப்பது தெரியவந்துள்ளது. ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்த்திற்காக தாக்குதல் நடத்தும் முறை ஆகும்.
ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை ஐஎஸ், அல் கொய்தா ஆகிய அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. 3 டிரம்களில் வெடிமருந்துகளுடன் ஆணி, கோலிகுண்டு உள்ளிட்டவற்றை நிரப்பி காரில் வைத்துக்கொண்டு ஜமோசா முபின் காரை கோயில் முன்பாக நிறுத்தி சிலிண்டரில் இருந்து கேசை திறந்து விட்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி கோயில் முன்பு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த முபின் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. ஜமோசா முபின் தனது நெருங்கிய உறவினர்களாக அசாரூதீன் மற்றும் அப்சர்கான் ஆகியோருடன் சென்று சங்கமேஸ்வரர், கோனியம்மன் கோயில் மற்றும் விநாயகர் கோயில்களை நோட்டமிட்டு ஒத்திகை பார்த்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஜமோசா முபின் அவரது உறவினர்களான அசாருதீன் மற்றும் அப்சர்கான் ஆகியோர் காந்தி பார்க் பகுதியில் கேஸ் சிலிண்டர்கள் வாங்கியிருப்பதும், பழைய மார்க்கெட் பகுதியில் 3 இரும்பு ட்ரம்களை வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
என்.ஐ.ஏ விசாரணையை தொடங்கும் முன்பே கோவை காவல்துறையினர் முக்கிய தகவல்களை விசாரணை செய்து சேகரித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“