Advertisment

கவுண்டமணி சொத்து வழக்கு: 20 ஆண்டு சட்டப் போராட்டத்தில் வெற்றி; ஐகோர்ட் தீர்ப்பு

நடிகர் கவுண்டமணியின் சொத்துப் பிரச்னை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் உள்ள தனது சொத்தைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Goundamani Madras HC

நடிகர் கவுண்டமணி சொத்துப் பிரச்னை வழக்கில் தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் சொத்துப் பிரச்னை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் உள்ள தனது சொத்தைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisment

நடிகர் கவுண்டமணி 1996-97-ல் நளினி பாய் என்பவரிடம் இருந்து கோடம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் 5 கிரவுண்டு மற்றும் 454 சதுர அடி நிலத்தை வாங்கி, அந்த இடத்தை, ஸ்ரீ அபிராமி ஃபவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பில் வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டும் என  3.58 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இருப்பினும், அந்நிறுவனம் கட்டுமானப் பணியை முடிப்பதற்கான காலக்கெடுவைக் கடைப்பிடிக்காமல் அதிக பணம் கேட்க முயன்றது. 2004-ம் ஆண்டில், அந்த நிறுவனம் கட்டுமானப் பணியைக் கைவிட்டது.

கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர் கட்டணமாக 1996 ஆம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை 1 கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், 2003-ம் ஆண்டு வரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை; கட்டுமான நிறுவனம் வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்து, சிலரை அங்கு நிறுத்தி அந்த இடம் தங்களுடையது என்று கையகப்படுத்தியுள்ளது. அதனால், கட்டுமான நிறுவனத்துக்கு எதிராகவும் அவர்களுடைய ஆட்களுக்கு எதிராகவும் நிரந்தரத் தடை விதிக்கக் கோரியும், சொத்தை  மீட்டெடுக்கக் கோரியும் கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்தினர் 2006-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர், 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையைச் சுட்டிக் காட்டிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “கட்டுமானப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு பணம் தராவிட்டால்தான் அதைக் கேட்க முடியும். முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே நடிகர் கவுண்டமணியிடம் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளது. நடிகர் கவுண்டமணியிடமிருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

2019-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் ஸ்ரீஅபிராமி பவுண்டேஷன் நிறுவனம் 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஆர் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமவு அளித்த தீர்ப்பில், நடிகர் கவுண்டமணியிடம் இருந்து பணம் பெற்ற பிறகும் அந்நிறுவனம் கட்டுமானப் பணியை முடிக்காததால், அந்த சொத்தை சட்டப்பூர்வமாக வைத்திருக்க முடியாது என்றும், அதை தொடர்ந்து வைத்திருக்க உரிமை இல்லை என்றும் கூறியது.

தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்த இரு நீதிபதிகள் அமர்வு, கட்டுமான நிறுவனம் இந்த சொத்தின் உரிமையாளர் இல்லை என்பதால் சொத்தின் ஆவணங்களை வைத்திருக்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை என்றும், கவுண்டமணி ஆவணங்களைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரவு தவறானது அல்லது சட்டவிரோதமானது என்று கூற முடியாது. சட்டப்பூர்வ உரிமையின்றி சென்னையில் உள்ள சொத்தை ஆக்கிரமித்துள்ளதால், நடிகருக்கு இழப்பீடு வழங்க கட்டுமான நிறுவனம் பொறுப்பாகும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment