அமைதியாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய வகையில் காந்திதான் எனக்கு பிடித்த தலைவர் என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று சாய்ராம் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது, மாணவ, மாணவிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “இன்று முதல் நாட்டு நடப்பை பாருங்கள் அது உங்கள் கடமை. நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் நான். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை. நீங்கள் வாருங்கள் என்று கூற வந்துள்ளேன்.
நான் இங்கு தலைவனாக வரவில்லை. தலைவர்களை சந்திக்கவே வந்திருக்கிறேன்”, என பேசினார்.
மேலும், ”நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போச்சு என பேசுவது மட்டும் சரியா? தவறை இன்றே சரிசெய்ய வேண்டும்”, என மாணவர்கள் மத்தியில் கூறினார்.
”உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?”, என்ற கேள்விக்கு ”அமைதியாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய வகையில் காந்திதான் எனக்கு பிடித்த தலைவர். காமராஜர், பெரியார், எம்ஜிஆர், கருணாநிதியும் எனக்கு பிடித்த தலைவர்கள்தான்”, என கூறினார்.
மேலும், பத்மாவத் திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு குறித்தும், ராஜ்புத் அமைப்பினர் பள்ளி வாகனம் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும் கமல்ஹாசன் பேசினார். அப்போது, ”பத்மாவத் படத்தின் பெயரால் பள்ளி குழந்தைகள் சென்ற வாகனம் மீது கல்வீசப்பட்டது. சும்மா இருங்கள், எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா? இப்போது, அன்பே சிவம், தேவர்மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது.”, எனவும் கூறினார்.
தான் தன் மகள்களை மரம்போல் வளர்த்திருப்பதாகவும், குழந்தைகள் எப்படி வளர நினைக்கிறார்களோ அவர்களை அப்படி வளரவிட வேண்டும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.