நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து இன்று கடிதம் கொடுத்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இருப்பினும் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்காததால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வந்தார். தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
இந்த நிலையில், சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை இன்று (ஏப்ரல் 25) மன்சூர் அலிகான் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார்.
அதோடு இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க கோரியும் விண்ணப்பம் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன். பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. அவரை ஒரு சாதாரணக் குடிமகனாக கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“