/tamil-ie/media/media_files/uploads/2022/08/New-Project11.jpg)
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (ஆகஸ்ட் 8) சந்தித்துப் பேசினார். 2 நாட்களுக்கு முன்பு ரஜினி டெல்லி சென்றிருந்தார். பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பியதும் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரஜினி நடிப்பில் கடந்த தீபாவளி அன்று 'அண்ணாத்த' படம் வெளியானது. இப்படத்திற்கு கலவையான வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 நாட்களுக்கு முன் ரஜினி டெல்லி புறப்பட்டு சென்றார். படப்பிடிப்பிற்காக சென்றார் எனக் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.
டெல்லியில் ரஜினி சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து திரும்பியதும், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என ரஜினி சார்பில் கூறப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடையே பேசிய ரஜினி, ஆளுனருடன் அரசியல் பேசினேன் எனக் கூறினார்.
"இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு. அவரிடம் 30 நிமிடம் பேசினேன். அவர் வட மாநிலங்களில் இருந்தவர். தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். தமிழ் மக்களின் நேர்மை, கடுமையான உழைப்பு அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. முக்கியமாக இங்கிருக்கும் ஆன்மிக உணர்வு அவரை மிகவும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினி, மறுபடியும் அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதாக எனக் கேட்டதற்கு, இல்லை என பதிலளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.