/tamil-ie/media/media_files/uploads/2021/08/surya-tax.jpg)
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் விலக்கு கோரி, நடிகர் சூர்யா தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010 ஆண்டில், நடிகர் சூர்யா வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையை நடந்தது. அப்போது சூர்யாவுக்கு, 2007-2008 மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டிற்கான 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வருமான வரியை செலுத்த 2011 ஆண்டு, வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில், சூர்யா தரப்பிலும், வருமான வரித்துறை தரப்பிலும் முறையிடப்பட்டது.
மனுக்களை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வருமான வரித்துறையின் வரி செலுத்தும் உத்தரவை உறுதி செய்தது.
இந்த நிலையில், தனது வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பாயத்தில் தீர்வு காணப்பட்டதால், வட்டி செலுத்துவதில் விலக்கு கோரி சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். வருமான வரி சட்டத்தின் படி, வரி செலுத்தாத ஒவ்வொரு மாதத்திற்கும் 1 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
இந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில், சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும், ஆனால், சூர்யா தாமதமாகத்தான் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தார். மேலும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை. மேலும், சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லை. என்று வாதிடப்பட்டது.
இதனையடுத்து, வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.