/indian-express-tamil/media/media_files/2025/08/11/kamal-hassan-2025-08-11-09-03-44.jpg)
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சீரியல் நடிகர்: முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு
சனாத்தன தர்மம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15-வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பங்கேற்று சிறப்புரை உரையாற்றினார். அப்போது, சனாதனம் குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், ‘கமல்ஹாசன் சங்கை அறுத்து விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஏ.ஜி. மௌரியா, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு, ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி நடிகர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தான் பேசியது "வேண்டுமென்றே" அல்ல என்றும், கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் விளக்கம் பெற்று, ஆகஸ்ட் 20, புதன்கிழமை அன்று பதிலளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
தான் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தயாராக இருப்பதாக ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கு தமிழக அரசியலிலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.