கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் இருந்து நடிகர் வடிவேலு ஒதுங்கியிருந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, ஸ்டாலின் மற்றும் தி.மு.கவின் ஆட்சி குறித்து பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது, "தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த மகனாக உள்ளார் முதல்வர் ஸ்டாலின். வெற்றி திருமகள் முதல்வர் ஸ்டாலினை எந்நேரமும் பற்றிக்கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக தெரிகிறது. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்தான் வென்று ஆட்சியில் அமர்வார். 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க கூட்டணி வெல்லும்" என்றார்.
இந்தி திணிப்பு விவகாரத்தை விலங்குகளோடு ஒப்பிட்டு விமர்சித்த வடிவேலு, “காக்கா.. காக்கா மாதிரி தானே கத்தும்.. கிளி மாதிரியா கத்தும்..” அதோட தாய் மொழியிலதான் கத்தத் தெரியும்.
காகத்தை கிளி மாதிரி கத்த வைக்க முடியாது” என்று நகைச்சுவையாக பேசினார்.
யார் யாருக்கு என்ன வேணுமோ அதை கத்துக்கட்டும் என்று பேசிய வடிவேலு, "ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாச்சாரம், மொழி இருக்கு. எதையும் கட்டாயப்படுத்தாதீங்கயா" என்று கூறி கையெடுத்து கும்பிட்டார். மேலும், தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் என்றும், யாருக்கும் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.