Vijay and Sagayam IAS will join in future Politics: இளைஞர்களின் மத்தியில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என புகழ்பெற்ற சகாயமும் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் மக்கள் பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனால், நடிகர் விஜய்யும் சகாயமும் வருங்காலத்தில் அரசியலில் கைகோர்ப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் தலைவர்களுக்கு இணையாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் பொதுமக்களிடம் பிரபலமானவர் என்றால் அது சகாயம் ஐ.ஏ.எஸ் என்பது மிகையல்ல. அதிலும் பல ஆயிரம் கோடி கிராணைட் கற்கள் வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி சுடுகாட்டுக்கே சென்று காவல் இருந்து கண்காணித்து விசாரித்தது எல்லாம் தமிழக மக்களுக்கு புதிதுதான்.
சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது நேர்மையாலும் அவ்வப்போது அரசியல் நிகழ்வுகளை விமர்சிப்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். தனது செயல்பாடுகள் மூலம் சகாயம் ஐ.ஏ.எஸ்-க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது.
அவர் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக மக்கள் பாதை அமைப்பின் பாதுகாவலராக உள்ளார். இந்த மக்கள் பாதை அமைப்பின் முப்பெரும் விழா சென்னை அருகே துரைப்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ் நேர்மையாளர் விருதை வழங்கினார்.
மக்கள் பாதை அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னெடுப்பாக அந்த அமைப்பில் மாணவரணி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம் போன்ற நிகழ்ச்சிகள் விழாவில் நடந்தன.
இந்த விழாவில் மற்றொரு முக்கிய செய்தி என்னவென்றால், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பங்கேற்றார் என்பதுதான்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.ஏ. சந்திரசேகர், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மாறமாட்டார்கள். அதனால், இளைஞர்கள் தான் மாற வேண்டும் என்றும் வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல தலைவர் கிடைப்பார் என்றும் பேசினார்.
கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சினிமாவிலும், பொதுத் தளத்திலும் ஆளும் கட்சிகளையும் தமிழக அரசியலையும் விமர்சனம் செய்து வருகிறார். நேர்மையான அரசியல், நிர்வாகம் தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறார். இதனால், பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்ட நடிகர் விஜய் அரசிலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போலத்தான், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமும் நேர்மையான அரசியலும் நேர்மையான நிர்வாகமும் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மக்கள் பாதை அமைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் விஜய்யும் சகாயமும் அரசியலில் கைகோர்க்கிறார்களோ என்ற யூகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர், சகாயத்தை வெகுவாக பாராட்டி பேசியுள்ளதால் நடிகர் விஜய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயமும் எதிர்காலத்தில் அரசியலில் இணைவதற்கான தொடக்கமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.