Actor vijay Tamil News: கடந்த 2012 ம் ஆண்டு ரூ.1.88 கோடி மதிப்பில் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்குக்குக் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப்பிறகு சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கபட்டது. இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி வழங்கி இருந்தார்.
"வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது'' என்று அவரது தீர்ப்பில் கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தும் இருந்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம். மேலும், இந்த வழக்கில் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபாரதம் விதித்து உத்தரவிட்ட அவர் அதை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு (டி.என்.சி.எம்.பி.ஆர்.எஃப்), ஜூன் 28 க்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் ஆக வலம் இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்த வண்ணம் உள்ளன. மேலும், நடிகர் விஜய் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா? சச்சினுக்கு மட்டும் ஏன் வரிவிலக்கு கொடுத்தார்கள்? என்பது போன்ற கேள்விகளை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். தவிர, நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தீர்ப்பிற்கெதிரான தங்களின் எதிப்பையும் பதிவு செய்துள்னர்.
இது தொடர்பாக நடிகர் விஜய் மேல்முறையீடு செய்வார் என்று தகவல்கள் வெளியான நிலையில், தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியின் தீர்ப்பை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், தீர்ப்பில் விதித்த ரூ.1 லட்சம் அபாரதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தீர்ப்பின்போது நீதிபதி தன்னை பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு நகலின்றி மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று திங்கட்கிழமை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா ஆகியோர் கொண்ட அமர்வு, வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிறப்பித்து உள்ளனர். எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“