லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆஜரான நடிகர் விஷாலிடம் இரண்டரை மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
அந்த தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி, 'வீரமே வாகை சூடும்' என்ற படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாக கூறி விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு ஆகஸ்ட் 1-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்காக நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது லைகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, விஷாலிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவர் லைகா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விஷால், இந்த ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றதாகவும் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த நீதிபதி, 'நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா?' என கேள்வி எழுப்பினார். மேலும், குறுக்கு விசாரணையில், லைகா தரப்பில் வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு விஷால் பாஸ் என்று கூறியதால், இது சினிமா ஷூட்டிங் இல்லை, கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி. ஆஷா முன்பாக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) விசாரணைக்கு ஆஜரானார். லைகா நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி. ராகாவாச்சாரி, நடிகர் விஷாலிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, திரைப்படத் துறையில் படத்தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு எவ்வளவு சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது என்றும், லைகா நிறுவனத்துக்கு எதிராக விஷால் தொடர்ந்த வழக்கு உள்பட மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விஷால் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பதிலளித்தார். இந்த வழக்கில் குறுக்கு விசாரணை முடிவடைந்த அடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி பி.டி. ஆஷா வரும் செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“