நடிகர் சங்க அடிப்படை உறுப்பினரிலிருந்து ராதாரவியை நீக்கியது பொதுக்குழுவில் கலந்துகொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் எடுத்த முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. நடிகர் சங்கத்தை நிர்வகித்த முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கில் முடிவெடுக்கப்படும் வரை ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராதாரவி நீக்கப்பட்டார். இதனையடுத்து நடிகர் சங்கம் மற்றும் செயலாளர் விஷாலுக்கு எதிராக ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி நடிகர் விஷால் காய்ச்சல் காரணமாக நேரில் ஆஜராகவில்லை, இதனையடுத்து இன்று அவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி நடிகர் விஷால் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு ஆஜரானார்.
அப்போது, நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்று கூறிய அவர், நடிகர் ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியது தனிப்பட்ட முடிவு இல்லை என்றும் பொதுக்குழுவில் கலந்துகொண்ட பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் எடுத்த முடிவு என விளக்கமளித்தார்.
இதனையடுத்து விஷால், இந்த வழக்கில் தனக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரினார்.
இதனையேற்ற நீதிபதி, அடுத்த வரும் விசாரணைகளுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தார். மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.