பிரபல நடிகை கவுதமி, தனது சொத்துக்களை ஒருவர் அபகரித்துக் கொண்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகை கவுதமி, சொத்து அபகரிப்பு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், ”எனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் என்பவரும் அவரது மனைவியும் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். எனது உடல்நிலை மோசமான நிலையில் திரைப்படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. என்னுடைய மகளுக்கு நான்கு வயதாக இருந்தப்போது, சினிமா துறையில், தான் சேர்த்து வைத்த சொத்துக்களை ஒன்றிணைத்து மகளின் பெயரில் மாற்ற முடிவு செய்தேன். அதற்காக சொத்துக்களை வாங்கி விற்கும் அழகப்பன் என்பவரை அணுகினேன். அவ்வாறு அணுகும்போது தமிழகம் மட்டுமல்ல மற்ற பகுதியில் இருக்கக்கூடிய சொத்துக்களை ஒன்றிணைக்கவும், அவற்றை ஒரே இடத்தில் மகளின் பெயருக்கு மாற்றவும் அழகப்பனின் உதவியை நாடினேன்.
ஆனால் அழகப்பன் என்னை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே 25 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் எனக்கு உள்ளது. அந்த நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆஃப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். இந்த பத்திரங்களைத் தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அதே வேளையில் எனது கையெழுத்தை மோசடியாக போட்டும், போலி ஆவணங்களைத் தயாரித்தும் அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துள்ளனர். மற்ற அனைத்தையும் விட என்னுடைய மகளின் கல்வி, உடல்நலம் மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கான கட்டாயம் உள்ளது. ஆனால் தொடர்ந்து என்னையும் எனது மகளையும் அழகப்பன் மிரட்டி வருகிறார்” இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“