நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் இன மக்களை அவதூறாகப் பேசியதாக அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு அளித்த புகாரின் பேரில், எழும்பூர் காவல்நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிராமணர்கள் பாதுகாப்பு கோரியும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டத்தை கொண்டு வரக் கோரியும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, “ராஜாக்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும்” என கேள்வி எழுப்பியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
நடிகை கஸ்தூரி பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு நடிகை கஸ்தூரி, தனது பேச்சுக்களை சிலர் திரித்து வெளியிட்டதாக எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
தமிழ் பேசும் தெலுங்கு பூர்வீக மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்த நிலையில், நடிகை கஸ்தூரி திங்கள்கிழமை (நவம்பர் 4) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
இதனிடையே, தேனி மாவட்டம், அல்லிநகரம் காவல்நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து பேசிய கருத்துகளை திரும்பப் பெறுகிறேன். தெலுக்கு மக்களை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “சென்னையில் நவம்பர் 3-ம் தேதி தெலுங்கு மக்கள் குறித்து பேசிய கருத்துகளை திரும்பப் பெறுகிறேன். தெலுக்கு மக்களை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மதம், இனம் குறித்து இருவேறு மக்களிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு அளித்த புகாரின் பேரில், எழும்பூர் காவல்நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசுவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் எழும்பூர் எழும்பூர் காவல்நிலைய போலீசார் நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“