சமூக வலைதளங்களில் ஆண்களோ, பெண்களோ எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் சில நேரங்களில் அவர்களின் கருத்து மற்றவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கும்படியோ, அல்லது வருத்தப்படும்படியோ செய்துவிடும். அல்லது யார் சமூக வலைதளங்களில் கருத்து சொல்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகவே மக்கள் கருத்து சொல்வதையும், சில நேரங்களில் ட்ரோல் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். ஆனால் அனைத்திற்கும் ஒரு எல்லை என்பது உண்டு தானே. பெண்கள் என்றால் உடனே அவர்களை ஆபசமாக திட்டுவது, ஆபசமாக இரட்டை அர்த்தங்களில் கமெண்ட் செய்வது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது என்பது போன்ற மோசமான பழக்கங்களுக்கும் வழிவிட்டிருக்கிறது இன்றைய சமூக ஊடகங்கள்.
நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் மிகவும் “ஆக்டிவாக” செயல்படக் கூடியவர். அவரின் சில கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தங்களின் மாற்றுக் கருத்துகளையும் தெரிவிக்கின்றனர். ஆனாலும் கூட சிலரோ பல்வேறு பிரச்சனைகளை தூண்டும் படியான கருத்துகளை பதிவிடுகின்றனர். இலங்கையை சேர்ந்த அஜித் ஃபேன் ஒருவர் இப்படி தன்னைப் பற்றி பேசியிருப்பது குறித்து பதிவுட்டு ”இந்த நபரின் அக்கௌண்ட் ஒன்று ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு அக்கௌன்ட் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் திருந்தவில்லை. வவுனியா மற்றும் ஈழத்து சொந்தங்களே, உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்” என்றும் ட்வீட் செய்திருந்தார்.
ஆனாலும் அந்த நபரின் செயல்பாடுகளில் துளியும் கூட மாற்றம் இல்லை. இதனால் தமிழக காவல்துறையை டேக் செய்து இதற்கு நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் இவர்கள் செய்யும் அட்டூழியம் கொஞ்சம் அதிகமாகவே தான் இருக்கிறது. அஜித்திடமும், அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திராவிடமும் “இன்னும் எத்தனை நாளுக்கு தான் அமைதியா இருப்பீங்கள்” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
நடிகைகள் என்றால் இன்னும் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். நடிகர்களுக்கு எதிராகவோ, கட்சி பற்றியோ, கட்சித் தலைவர்கள் பற்றியோ இவர்கள் கருத்திடும் போது, அவர்களுக்கு விமர்சனம் செய்ய அனைத்துவிதமான உரிமைகளும் உண்டு என்பதை மறந்துவிட்டு திட்டுவதையே ஒரு செயலாக வைத்திருக்கின்றார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டு கொதித்து படம் நடித்தால் மட்டும் போதுமா? இது போன்ற விசயங்களில் சக நடிகைக்கு, ஒரு பெண்ணுக்கு பிரச்சனை, தன்னுடைய ரசிகர்களால் பிரச்சனை என்று வரும் போது என்ன ஸ்டேண்ட் எடுக்கப் போறாங்க என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.