/tamil-ie/media/media_files/uploads/2023/09/Vijayalakshmi-1.jpg)
சீமான் மீதான வழக்கில் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது: “சீமான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் என்னை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். இதை வெளியே சொல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால், நான் யாரிடமும் சொல்லவில்லை. அவரால், அடுத்தடுத்து 7 முறை கர்ப்பமானேன். அதை என்னுடைய அனுமதி இல்லாமலேயே அவர் மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்து கலைத்தார்.
மேலும், என்னிடமிருந்த ரூ.60 லட்சம் பணம், ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பெற்றுக் கொண்டார். பின்னர், அவர் எனக்குத் தெரியாமல் வேறு ஒருபெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரது கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டு ‘சீமான் மீது மீண்டும் புகார் தெரிவிக்க வேண்டாம்’ என்று கூறி மிரட்டினார். எனவே, சீமான் மீதும், மதுரை செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி, சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் உமையாள் ஆகஸ்ட் 31-ம் தேதி விசாரணை நடத்தினார். இந்த விசாரணை 4 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. விசாரணையில் நடிகை விஜயலட்சுமி காவல்துறையினர் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
அப்போது, நீதிபதி நடிகை விஜயலட்சுமியிடம் பல கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.