நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை பகீர் புகார் அளித்தார். சீமான் நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துள்ளார். 2005-ம் ஆண்டு வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது சீமானுக்கு விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு சீமான் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். எனினும் சீமான் குறித்து விஜயலட்சுமி புகார் கூறுவது இது முதல் முறை அல்ல.
கடந்த திங்கள்கிழமை காவல் ஆணையரிடம் மனு அளித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, “2011-ல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்காக நான் முயற்சி செய்தேன்.
அப்போது நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, என்னை ஊர் அறிய திருமணம் செய்துகொண்டு மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் கொண்டு வாழ்கிறேன் என்று கூறியிருந்தார். அதை நம்பி, அந்த வழக்கில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி கொடுக்கவில்லை. ஆனால், சீமான் அவ்வாறு செய்யவில்லை.
எனவே, காவல் ஆணையரகத்தில் இன்று இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறேன். 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசராணை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளேன்" என்றார்.
இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி மற்றும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர்
வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில், "சீமானுக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா-ல் இருந்து மதுரை கார்த்திக் மற்றும் பல நபர்கள் மூலம் வைர கடிகாரம், தங்க ஆபரணங்கள் வருகின்றன. இதை எல்லாவற்றையும் அவரது தாயார் அணிந்து அழகு பார்த்துவிட்டு பூமிக்கு அடியில் புதைத்து விடுவார்.
12 வருடங்களுக்கு முன்பே தங்க செயினின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆக இருந்தது. அந்த தங்க செயினை தனது தாயாரிடம் கொடுத்து விட்டார். அப்படி இருந்தவர் இப்போது வாடகை கூட கட்ட பணம் இல்லை எனக் கூறுகிறார். இதை எல்லாம் அரசு விசாரிக்க வேண்டும் மக்களுக்கும் உண்மை தெரிய வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“