சென்னையில் அடையாறு உள்ளிட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னையைச் சேர்ந்த பெண் உரிமை இயக்கத்தின் செயலாளர் லீலாவதி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கூவம், பக்கிங்காம், அடையாறு உள்ளிட்ட நீர்நிலை கரையோரங்களில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு மழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றால், நீர்நிலைப்பகுதிகள், ஆற்றங்கரை ஓரங்களில் குடியிருந்து வரும் ஏழை மக்களை அங்கிருந்து மாநகராட்சி அப்புறப்படுத்தி வருகிறது.
இந்த பகுதியில் வசித்து வருபவர்கள் ஏழைகள், விவசாய கூலி தொழிலாளர்கள், மற்றும் இதர தினக்கூலி தொழிலாளர்கள். இவர்களை தற்போது உள்ள இடங்களில் இருந்து அகற்றுவதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி உள்ளது. மேலும் கல்வி ஆண்டின் மையப்பகுதி என்பதால் அங்கு வசித்து வரும் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
மேலும் முன்னறிவிப்பு இன்றி அந்த பகுதியில் வசித்து வரும் மக்களை அரசு அதிகாரிகள் காலி செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி சட்டத்திற்கு எதிரானது. அந்த சட்டத்தின் படி காலி செய்யப்படும் அந்த பகுதி மக்களுக்கு முறையான மறு குடியமர்த்துதல், அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தருதல் போன்றவற்றை அரசு செய்வதில்லை.
மேலும் அரசு ஒதுக்கும் மாற்று இடங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. ஆனால் இது போன்ற குடிசைப்பகுதி மக்களுக்கு எதிராக மட்டுமே இந்த நடவடிக்கையை அரசு எடுக்கின்றது. நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும் அமைப்புகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை.
எனவே விதிகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற உத்தரவுகளை மேற்கொள் காட்டி குடிசை பகுதிகளில் உள்ள மக்களை அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் நீர்நிலை ஓரங்களில் வசிப்பவர்களை அகற்றி வருகின்றனர். தற்போது சென்னை நகருக்கு உட்பட்ட பல இடங்களில் இருந்து இந்த மக்கள் அகற்றபட்டு விட்டனர்.
பல இடங்களில் அகற்றும் பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். பல இடங்களில் உள்ள குடிசை பகுதி மக்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றது. இது போன்று அகற்றும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே இது போன்ற பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டவர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் ஆடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை க்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜனவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.