கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 26 பாலங்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது என கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஃபீஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி பார்வையிட்டனர்.
ஃபீஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அகியோர் பார்வையிட்டனர். ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககந்தீப் சிங் பேடி கூறியதாவது: “ஃபீஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கடலூர் மற்றும் பணருட்டி வட்டங்களுக்குட்பட்ட கரையோர பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, நீர் வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் வெள்ள நீர் துரிதமாக அகற்றப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 83 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதமடைந்துள்ளது, தற்போது வரை 68 கிலோ மீட்டர் சாலைகள் பொது போக்குவரத்திற்கு இடையூறு இன்றி சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை நெடுஞ்சாலை துறை மூலம் 28 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு மற்றும் மலட்டாற்றில் ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளப்பெருக்கினால் பல்வேறு பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ள சாலைகள் மற்றும் சேதமடைந்துள்ள 26 சிறு பாலங்கள் மற்றும் 3 தலைப்பாலங்களையும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்பெண்ணை ஆற்று கரையோர பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ள சாலைகள், சிறு பாலங்கள் மற்றும் விவசாய நிலங்களை ஆய்வு செய்யும் விதமாக கடலூர் கஸ்டம்ஸ் சாலையில் மருதாடு கிராமம் அருகே சேதமடைந்துள்ள சிறுபாலம், அழகியநத்தம் - மருதாடு சாலையில் உள்ள இணைப்பு தரைப்பாலத்தின் அணுகு சாலை துண்டிக்கப்பட்டுள்ளதையும் பொது போக்குவரத்திற்கு இடையூறு இன்றி தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்ற வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, அழகியநத்தம் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் சாகுபடி பரப்பினையும் பார்வையிட்டு, நெற்பயிர் சேத விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறியப்பட்டது. பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வெள்ளப்பெருக்கினால் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், ஏரிப்பாளையம் - செம்மேடு சாலையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமானப் பணிகள் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், திருத்துறையூர் – சின்னப்பேட்டை இடையே உள்ள சிறுபாலம் மழை வெள்ளத்தால் சேதமுற்று, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.