தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பலின் மூலம், மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதீப், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தாரா என்பது தொடர்பாக, அவரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேஷியாவில் இருந்து விர்கோ 9 என்ற சரக்கு கப்பல், கடந்த மாதம் 11ம் தேதி, போஸ்கோ என்ற இந்தியர் மற்றும் 8 இந்தோனேஷிய நாட்டவர்களுடன் தூத்துக்குடி புறப்பட்டது. 27ம் தேதியன்று, கப்பலில் புதிதாக ஒருநபர் தென்பட்டார். இதனையடுத்து கப்பல் ஏஜென்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து, கஸ்டம்ஸ் அதிகாரிகள், போலீசார், தூத்துக்குடி துறைமுகத்திற்கு சில மைல்கள் தொலைவிலேயே அந்த கப்பலை நிறுத்தினர். கப்பலுக்கு விரைந்த அதிகாரிகள் புதிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த நபர் அப்துல் அதீப் என்றும், மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் என்பது தெரியவந்தது. கடந்த ஜூன் மாதத்தில் கண் சிகிச்சைக்காக மகாராஷ்டிரா மாநிலம் பூனேவிற்கு வருகை தந்துள்ளார். தற்போது அவர் ஏன் வந்தார். அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என்பது தொடர்பாக, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்திருந்தால், இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு பாதிக்கப்படும். அந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருப்பதாகவும், அவரை மீண்டும் மாலத்தீவுக்கு திருப்பி அனுப்புவதற்காக, அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
யார் இந்த அப்துல் அதீப் : அப்துல் அதீப், 2015ம் ஆண்டு ஜூலை 22 முதல் நவம்பர் 5ம் தேதி வரை மாலத்தீவு நாட்டின் துணை அதிபராக இருந்தார். அதிபர் அப்துல்லா அமீனை, 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஸ்பீட்போட் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2016ம் ஆண்டு அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு மே மாதத்தில் இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.