/indian-express-tamil/media/media_files/2025/06/19/adgp-jayaram-2025-06-19-12-49-59.jpg)
TN ADGP suspension: SC transfers abduction case probe to CB-CID
சிறுவன் கடத்தல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரம் ஒன்றில், மைனர் சிறுவன் கடத்தப்பட்ட நிகழ்வில் ஏடிஜிபி ஜெயராம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தமிழக காவல் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஜெயராமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை ஏன் பணியிடை நீக்கம் செய்தது என்று தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்தது. மேலும், சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஜெயராம் முழு ஒத்துழைப்பு அளிப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ததற்கான ஆவணங்களை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் டேவ், "மாநிலத்தின் மிக உயர்ந்த புலனாய்வு அமைப்பான CB-CID-க்கு இந்த வழக்கை மாற்றுவதற்கு அரசு தயாராக உள்ளது" என்று தெரிவித்தார். உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து வேறு ஒரு ஏஜென்சிக்கு விசாரணையை மாற்ற மாநில அரசு முன்வருமா என்று உச்ச நீதிமன்றம் கேட்டதை அடுத்து இந்த முடிவை டேவ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், "வழக்கின் சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் விசாரணையை CB-CID-க்கு ஒப்படைப்பது சிறந்தது என்று நாங்கள் கருதுகிறோம். இந்த விசாரணையை மாற்றுவதற்கு மாநில அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று டேவ் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டது.
கைது உத்தரவு ரத்து - சஸ்பென்ஷன் நீட்டிப்பு:
டிஜிபி ஜெயராமை 'பாதுகாத்து நடவடிக்கை எடுக்க' வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்குகளை மற்றொரு அமர்வுக்கு மாற்றும்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரப்பட்டது.
ஜெயராம் கைது செய்யப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்படாத நிலையில் ஏன் சஸ்பென்ட் செய்யப்பட்டார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு டேவ், "சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளால் அவர் சஸ்பென்ட் செய்யப்படவில்லை. அகில இந்திய சேவைகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969 இன் கீழ் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். ஒரு குற்றவியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அல்லது விசாரணை நிலுவையில் உள்ள ஒரு சேவை உறுப்பினரை (இந்த வழக்கில் ஐபிஎஸ்) சஸ்பென்ட் செய்ய இந்த விதிகள் ஒழுங்குமுறை அதிகாரத்திற்கு அதிகாரம் அளிக்கின்றன" என்று விளக்கமளித்தார்.
மேலும், "தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் அறிக்கையின் அடிப்படையில், மனுதாரரின் சஸ்பென்ஷன் உத்தரவைத் தொடர்வது அல்லது ரத்து செய்வது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும்" என்றும் டேவ் தெரிவித்தார். இந்த வழக்கு தமிழக காவல்துறை மற்றும் நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read in English: TN ADGP suspension: SC transfers abduction case probe to CB-CID
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.