17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, இன்று (ஜூன் 16, 2025) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக இருந்த ஜெகன் மூர்த்தி, நேற்று முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் கடத்தலுக்கு உதவியதாகக் கூறப்படும் ஏ.டி.ஜி.பி ஜெயராமனும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தார். அவர் ஆஜராகவில்லை என்றால், கைது செய்து ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. கடத்தலுக்கு ஏ.டி.ஜி.பி ஜெயராமனின் அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது, இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஏ.டி.ஜி.பி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அவரது வருகையை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புரட்சி பாரதம் கட்சி வழக்கறிஞர்கள் பெருமளவில் குவிந்து வருவதால், நீதிமன்ற வளாகம் மேலும் பரபரப்படைந்துள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க, நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி ஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் முன்னதாகவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி வேல்முருகன், ஜெகன் மூர்த்திக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/16/AR06qhVIv56wPNNq5ZfV.jpg)
"உங்களை கட்டப் பஞ்சாயத்து செய்யவா மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள்? மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர, கட்டப் பஞ்சாயத்து செய்ய யார் அதிகாரம் கொடுத்தது? பதவியை தவறாகப் பயன்படுத்தினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது" என்று நீதிபதி எச்சரித்தார்.
ஏ.டி.ஜி.பி ஜெயராமனுக்கு இந்த ஆள் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பி ஜெயராமன், எம்.எல்.ஏ என்ற முறையில் ஜெகன் மூர்த்தியை சந்தித்ததாகவும், கடத்தலில் கூலிப்படையினர் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், கூலிப்படையினரை ஈடுபடுத்தியதாக காவல்துறை கூறுவது தவறான தகவல் என்றும் பூவை ஜெகன் மூர்த்தி தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஏ.டி.ஜி.பி ஜெயராமனை காவல்துறை கைது செய்தது.