/indian-express-tamil/media/media_files/2025/08/19/trichy-admk-banner-protest-2025-08-19-20-58-36.jpeg)
அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்திற்காக திருச்சிக்கு வருகை தர உள்ளார்.
அவரை வரவேற்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களை அகற்றிய காவல் துறையினரையும், மாநகராட்சி அதிகாரிகளையும் கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி, சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என்ற பெயரில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபடுகிறார். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ராஜாகோபுரம் அருகே 25 ஆம் தேதி தமிழக அரசை கண்டித்து பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு அவரை வரவேற்றும், வாழ்த்தியும் அ.தி.மு.க.,வினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததன் காரணமாக பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனைக் கண்டிக்கும் விதமாக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலருமான பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஶ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்ருமான பரஞ்சோதி தெரிவிக்கையில், “திருச்சி மாவட்டத்தில் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடியார் பரப்புரையில் ஈடுபட உள்ளார். குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் 25ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட உள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பரப்புரையில் தமிழகம் முழுவதும் மக்கள் திரண்டு வருவதால் இதனை கண்ட ஆளும் கட்சியினர் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு சில இடங்களில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். அதனை கலைய வேண்டும், பொது செயலாளர் சுற்றுப்பயணம் சிறப்பாக நடத்த வேண்டும் அதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற கோரிக்கையை காவல் நிலையத்தில் வைத்தோம். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர் உரிய பாதுகாப்பு வழங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கான கோர்ட் ஆர்டரை சுட்டிக்காட்டினார்கள். அதனை நாங்கள் மதிக்க கூடியவர்கள், கோர்ட் என்ன சொல்கிறதோ அதன்படி நாங்கள் நடந்து கொள்வோம்,” என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.