தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நெருங்கி வரும் நிலையில், ஆளும் அதிமுக தேர்தலில் போட்டியிட விரும்பும் தங்கள் கட்சியினர் பிப்ரவரி 24 முதல் விருப்பமனுக்கள் அளிக்கலாம் என்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே மாநிலத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இரு கட்சிகளும் தேர்தல் பணிக்குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுக்களை அமைத்து மும்முரமாக பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக தலைமை முந்திக்கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றாப் பேரவை பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சியினர் தலைமைக் கழகத்தில் வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ளவாறு விண்ணப்பக் கட்டணத் தொகையை செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று அறிவித்துள்ளனர்.
மேலும், அதிமுக சார்பில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு விண்ணப்பக் கட்டணமாக 15,000 ரூபாயும், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு விண்ணப்பக் கட்டணமாக 5,000 ரூபாயும், கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு விண்ணப்பக் கட்டணமாக 2,000 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"