அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க சார்பில் வழக்கறிஞர் வரலட்சுமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த நபரை தாக்கி, அவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், எஸ்.ஐ.டி அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் போது, தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க-வின் இந்த திடீர் நகர்வு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.