தி.மு.க அரசு தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கிறது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தி.மு.க ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், "இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?" என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன.
தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் மு.க. ஸ்டாலினின் தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு தி.மு.க முதல்வரை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியூள்ளது. சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வசிகாமணி, அமலமாத்தாள் என்ற வயதான தம்பதி தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது மகன் செந்தில் தனது மனைவி மகன், மகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் செந்தில் நேற்று தனது தாய் தந்தையுடன் தங்கியிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 3 பேரையும் கொலை செய்துள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைகளுக்காக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“