/tamil-ie/media/media_files/uploads/2023/08/eps-1.jpg)
எடப்பாடி பழனிச்சாமி
ஆட்சியை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் தான் கட்ச தீவை மீட்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார் என அ.தி.மு.க மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் பிரமாண்ட கூட்டம் இந்த மாநாடு என்பதால் தமிழக அரசியலில் களத்தில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது. மாநாடு நடக்கும் இடத்தில் 51 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.
இதையும் படியுங்கள்: தொடங்கியது அ.தி.மு.க மாநாடு: மதுரையில் குவிந்த தொண்டர்கள்
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-20-at-19.57.34.jpeg)
இந்த மாநாட்டில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க ஒரு மாபெரும் இயக்கம். தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க.
1972 அக்டோபர் 17-ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க கட்சியை தோற்றுவித்தார். இன்று அ.தி.மு.க பொன்விழா கொண்டாடி 51 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகாலம் தமிழ் மண்ணிலே ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க.
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது. கடைக்கோடி சாமானியனுக்கும் நன்மை கிடைத்தது. அனைத்து துறைகளிலும் முதன்மை துறையாக காட்டிய அரசு அ.தி.மு.க அரசு.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-20-at-19.58.04.jpeg)
அ.தி.மு.க-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது. ஏனெனின்ல் அ.தி.மு.க தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன். தொண்டன் உழைப்பால் உருவானது அ.தி.மு.க. 10 வருடம் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். புயல், வெள்ளம் போன்றவற்றை சிறப்பாக எதிர்கொண்டோம். கொரோனா பற்றி தெரியாத போதும் கூட அதன் பரவலை தடுத்தோம்.
மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மகிழ்ச்சி.
காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்தது அ.தி.மு.க.,தான். உச்ச நீதிமன்றத்தில் இதற்கான தீர்ப்பை பெற்ற அரசு அ.தி.மு.க அரசு. நான் விவசாயி. அதன்பின்தான் அரசியல்வாதி. விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-20-at-19.53.24.jpeg)
டெல்டா விவசாயிகள் தங்கள் நிலத்தை பாதுகாக்குமாறு கோரிக்கை வைத்தனர். நான் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்டம், நஷ்டங்களை புரிந்தவன் நான். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். பல ஆண்டுகளாக ஏரி, குளங்கள் தூர்வாரப்படாமல் இருந்தது. மழை நீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் கொண்டு வந்த அரசு, அ.தி.மு.க அரசு. டெல்டா மாவட்டங்களை காத்தது அ.தி.மு.க அரசாங்கம்தான்.
முதலீட்டாளர்கள் மாநாடு மூலம், பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியின்போது மருத்துவ துறையில் சாதனை படைத்தோம். அ.தி.மு.க ஆட்சியின் அனைத்து துறைகளிலும் விருதுகள் பெற்றோம்.
மீனவர்களுக்கு பாதுகாப்பான அரசு அ.தி.மு.க.,தான். கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தினோம். கச்சத்தீவை மீட்க தி.மு.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதை தி.மு.க ஆட்சிக்கு பொய் தான் மூலதனம். கட்சத்தீவை சந்திப்போம் என முதல்வர் ஸ்டாலின் பச்சையாக பொய் சொல்கிறார். 2008-ம் ஆண்டு கட்ச தீவை மீட்பதற்கு வழக்கு தொடுத்தது அ.தி.மு.க தான். 2011ல் சட்டப்பேரவையில் தீர்மானத்தை அ.தி.மு.க நிறைவேற்றியது. ஆட்சியை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் தான் கட்ச தீவை மீட்போம் என்று முதல்வர் பேசுகிறார். மீனவர்களின் வாக்குகளை பெறவே கச்சத்தீவை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
தி.மு.க.,வுக்கு அனைத்தும் பொய்தான். தி.மு.க முழுக்க முழுக்க பொய் பேசி தான் ஆட்சிக்கு வந்தனர். தி.மு.க.,வுக்கு பொய் தான் மூலதனம். ஆனால் பொய் பேசுபவன் இல்லை இந்த பழனிசாமி. சாதித்து காட்டுபவன். இவர்களே நீட் தேர்வை கொண்டுவந்துவிட்டு. இப்போது இவர்களே விலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்காங்க. கடந்த 2010-ல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்த போதும் தான் நீட் கொண்டு வரப்பட்டது. இதை மறைத்துவிட்டு தற்போது நீட் ரத்து கோரி உண்ணாவிரத நாடகம் நடத்துகின்றனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்துக்கு தான் இருக்கும் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஆட்சி நிறைவு செய்துவிட்டனர். ஆனால் எந்த முயற்சியும் செய்யவில்லை. தற்போது மக்களுக்கு ஆட்சியின் மீது அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக நீட் ரத்து உண்ணாவிரத நாடகம் நடத்தப்படுகிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க, அதை தடுக்க போராடுவது அ.தி.மு.க தான். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.