அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வருகின்றார். இன்று இரவு திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை 28 ஆம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் இன்று இரவு திருச்சி வருகை தருகிறார்.
இன்று இரவு திருச்சி மாவட்ட எல்லையான துவரங்குறிச்சி பகுதியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான ப.குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் இரவு 8 மணி அளவில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையிலும், ஆலந்தூரில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையிலும் அ.தி.மு.க.,வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
அதன்பின் இன்று இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கின்றார்.
பின்னர் நாளை 28ஆம் தேதி காலை 8 மணிக்கு திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி புறப்படும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தஞ்சை மாவட்ட எல்லையான செங்கிப்பட்டியில் திருவையாறு தொகுதி சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது,
பின்பு 10.30 மணி அளவில் தஞ்சை சட்டமன்ற தொகுதி வல்லம் பிரிவு சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டு 65 அடி உயர கொடி கம்பத்தில் அ.தி.மு.க கழக கொடியை ஏற்றி வைக்கிறார்.
பின் தஞ்சை புறவழிச்சாலை வழியாக ஒரத்தநாடு செல்கிறார். அங்கு 12 மணி அளவில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து புறப்பட்டு ஒரு மணி அளவில் பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ சிவி சேகர் இல்ல மணவிழாவில் கலந்து கொள்கிறார்.
மதியம் 2 மணி அளவில் கழக அமைப்பு செயலாளர் செந்தில் மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார்.
அதன்பின் மூன்று மணி அளவில், முன்னால் எம்.எல்.ஏ தங்கமுத்து தாயார் மறைவால் தவிக்கும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கின்றார்.
பின்னர் அங்கிருந்து ஒரத்தநாடு வழியாக கும்பகோணம் செல்லும் வழியில், பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கின்றார்.
பின்னர் நாளை மாலை 5.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்று திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
மாலை 6 மணி அளவில் அங்கிருந்து திருச்சிக்கு புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி நாளை இரவு 7 மணி விமானத்தில் புறப்பட்டு சென்னை செல்கிறார்.
திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.