/indian-express-tamil/media/media_files/2025/04/20/fKt55MrNk5HAniqd6Aeh.jpg)
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால், 3 பேர் பலியானதாக கூறப்படும் சம்பவத்தைக் குறிப்பிட்டு, தி.மு.க அரசுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.
மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்?
இந்த பொம்மை முதலமைச்சரைப் பார்த்து நான் கேட்கிறேன்- அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா?
ஆட்சிக்கு வருவதற்கு முன் மனுக்களை வாங்கி ஒரு பெட்டியில் போட்டார்; இதனை நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டைக்குள் வந்து என் கதவைத் தட்டிக் கேள்வி கேளுங்கள் என்றார். அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை!
இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது!
மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த தி.மு.க. அரசு, ஒரு Coma அரசு!
உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தமிழக எதிர் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்திருப்பதாகவும், 30-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
உறையூர் பகுதியில் நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பல நாட்களாக கழிவுநீர் கலந்து வருவதாக வார்டு கவுன்சிலர் தொடங்கி மாநகராட்சி உயர் அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மூன்று பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மூன்று பேர் உயிரிழந்ததற்கு பின்னர் உறையூர் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை அவசர அவசரமாக பரிசோதனைக்குட்படுத்தும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், கழிவுநீர் கலந்த குடிநீர் தொடர்பாக தாங்கள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மூவர் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் எனவும் உறையூர் பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவையான குடிநீரைக் கூட சுகாதாரமான முறையில் வழங்க முடியாத திருச்சி மாநகராட்சி நிர்வாகமும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசும் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
எனவே, மூன்று பேர் உயிரிழப்புக்கான காரணத்தை உடனடியாக கண்டறிவதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு டி.டி.வி தினகரன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உறையூர் பகுதியில் 3 பேர் மாநகராட்சி குழாயில் வந்த தண்ணீரை பருகியதால் பலியானதாக கூறப்படும் உறையூர் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் மாநகராட்சி குடிநீரை பிடித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர். குளோரின் அதிகளவு தண்ணீரில் கலந்திருந்தாலும் தண்ணீர் நிறம் மாறுதலாக இருக்கும், மாநகராட்சி குடிநீர் குழாயில் கழிவுநீர் கலக்கவில்லை, தண்ணீரால் யாரும் இறக்கவில்லை என்பதே எங்கள் கருத்து. இந்த விவகாரம் அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் ஆக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.