200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில், 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் ‘கிராமசபை மற்றும் வார்டு’ கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது.
இந்நிலையில், கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டத்தைக் கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது. சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன என்று ஆட்சியர்களுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கையில்,
''தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கிய கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பாகும். இக் கிராம சபைகள் அவ் ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை. கிராம சபைகள் செயல்படும் முறைகள் குறித்த தெளிவான விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குறைந்தபட்சம் நான்கு முறை அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபை நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி நிருவாகத்தில் மிக முக்கியப் பங்காற்றும் கிராம சபைகள் ஊரக பகுதி மக்களின் குறைகளைக் களைந்து கிராம முன்னேற்றம் காண வழிவகுக்கிறது. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவை.
இந்நிலையில், சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஊராட்சிகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது மட்டும் அல்லாமல் அந்த அமைப்பை இந்நடவடிக்கை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கிராம சபை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பாக மேற்படி ஊராட்சி சட்டத்தின் பிரிவு 3(2-ஏ)-ன் படி கிராம சபையினை கூட்டும் அதிகாரம் ஊராட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளது. அவர் கிராம சபைக் கூட்ட தவறும்பட்சத்தில், ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித் தலைவர், கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும். எனவே, மேற்படி சட்டத்தாள் அதிகாரம் பெற்றவர்களைத் தவிர, கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டத்தைக் கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது. எனவே இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் கீழ் கிராம சபைகளைக் கூட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனிநபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரைத் தவறாக பயன்படுத்தி இதுபோன்ற அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்''.
என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.