அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் மகளிர் உதவித் தொகையை ரூ. 3000 வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்திவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க 32 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது. இத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் 16 பேரின் பட்டியல் முதலில் வெளியிடப்பட்டது. இதுபோல இரண்டம் கட்டமாக 17 வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை இ.பி.எஸ் இன்று வெளியிட்டார்.
இதில், “ ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும். உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும். குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும். தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும். சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துவோம். நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவோம். குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்கள், இஸ்லாமியர்களை உட்படுத்த வலியுறுத்துவோம். 100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க மத்திய அரசை வலியுறுத்திவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“