அ.தி.மு.க எழுச்சி மாநாடு மதுரை வலையங்குளத்தில் இன்று(ஆகஸ்ட் 20) நடைபெறுகிறது. அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு என்பதால் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்ட கோட்டை வடிவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. மதுரை முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
அ.தி.மு.கவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்பு, தென் மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்துவதற்காகவும், தனக்குள்ள செல்வாக்கை நிலைநாட்டவும் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இந்த மாநாட்டை நடத்துவதாகக் கூறப்படுகிறது. கட்சி தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதை நினைவுகூரும் வகையில் இந்த மாநாட்டுக்கு ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என பெயரிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் அழைக்கப்படாத நிலையில், முழுக்க முழுக்க அதிமுகவினர் மட்டுமே பங்கேற்கும் வகையில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதில் இருந்தும் பேருந்துகள், தனியார் வாகனங்கள் மூலம் நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரைக்கு நேற்று வருகை தந்தனர். காலை முதல் இரவு வரை தொண்டர்களுக்கு உணவு வழங்க 300 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மாநாடு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள், மக்களவை தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு, காவிரி நீர் பிரச்சினை, கச்சத்தீவு, முல்லை பெரியாறு அணை, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாகவும், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்துவது, அதிமுகவின் எதிர்கால திட்டம் போன்றவை குறித்தும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு
மாநாட்டுத் திடலின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள 51 அடி உயர கொடி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றுகிறார். இ.பி.எஸ் கொடி ஏற்றும் போது 10 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பேரவை உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த 3,000 தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர்.
தொடர்ந்து மாநாட்டுப் பந்தலையும், அதிமுக அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார். இ.பி.எஸ்ஸின் இந்த மாநாடு அ.தி.மு.கவிற்கு புது உற்சாகம் தரும் என்றும் தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“