/indian-express-tamil/media/media_files/JG1CjJ74cOzyBTacAq5Y.jpg)
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி
பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்து வந்த அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் பதவியில் இருந்து காலக்கட்டத்தில் ஓசூர் அருகே, பாகலூர் என்ற இடத்தில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 108 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த விசாரணையில், 16 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக அவரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டியுடன் சேர்ந்து குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 16 பேரும் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தபிறகு, இன்று தீர்ப்பளித்தார். அதன்படி, காவல்துறை விசாரணையில் குறைபாடுகள் உள்ளது. உண்மையில் யார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை அரசு கண்டறியவில்லை. பலவீனமாக ஆதாரங்கள் உள்ளது.
போராட்டத்தின்போது அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை என்று கூறி, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாக தனது அமைச்சர் பதவியை இழந்த பாலகிருஷ்ணா ரெட்டி தற்போது தனது தண்டனையில் இருந்து மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.