பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். எடப்பாடியைத் தொடர்ந்து செங்கோட்டையனின் டெல்லி பயணமும் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லிக்கு பயணித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே அ.தி.மு.க-வில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு எழுந்தன. அதேபோல் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி பெயரையும் கூறாமல் இருந்தார்.
சில நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். கட்சி அலுவலகத்தை பார்ப்பதற்காக டெல்லிக்கு சென்றதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவருடன் சி.வி. சண்முகம், கே.பி. முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் இருந்தனர். இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமையும் என்று பார்க்கப்பட்டது.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு தரப்பும் இதனை உறுதி செய்யாத நிலையில், அ.தி.மு.க-வில் பரபரப்பான சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரே நாளில் டெல்லி சென்றுவிட்டு செங்கோட்டையன் அவசரமாக தமிழ்நாடு திரும்பி வருவதற்கான காரணம் என்ன என்று அரசியல் விமர்சகர்களும் விவாதித்து வருகின்றனர்.