/tamil-ie/media/media_files/uploads/2022/01/chennai-high-court-1.jpg)
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டது. ஆனால், பொங்கல் பரிசு பொருள்கள் தரமற்றதாக இருப்பதாக ஆரம்பம் முதலே பல இடங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை சுட்டிக்காட்டி அதிமுகவும், பாஜகவும் கண்டனத்தை தெரிவித்து வந்தது.
இந்நிலையில், சுமார் 1,297 கோடி செலவில் 2.15 கோடி பேருக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், ரூ500 கோடி முறைகேடு நடைபெற்றதாகவும், இதனை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 21 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருட்களே வழங்கப்பட்டது. தரம் குறைந்த மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி மற்றும் ஊசி போன்ற அபாயகரமான பொருட்கள் இருந்தது குறித்தும், பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது குறித்தும் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை
கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில், விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்காமல், 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகவும், காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.மேற்கொண்டு பொங்கல் பரிசு வழங்கவும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.