/indian-express-tamil/media/media_files/6c5g1t4j2gnrFhBLok8H.jpeg)
100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்ததது. இதனையடுத்து, இன்று நீதிமன்ற உத்தரவின் கீழ் ஜாமீனில் சிறையில் திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோது எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது; ”கடந்த மூன்று ஆண்டுகளில் என் மீது, 31 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் அரசியல் சார்ந்த வழக்குகள். அதையும் தாண்டி, என் மீது தற்போது ஒரு சிவில் வழக்கை பதிவு செய்து, அதை கிரிமினல் வழக்காக மாற்றி, சி.பி.சி.ஐ.டி விசாரணை என்ற அளவிற்கு கொண்டு சென்றுள்ளார்கள். எனக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. ஜாமீன் கிடைத்து தற்போது வெளியே வந்திருக்கிறேன்.
இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இந்த வழக்கிலிருந்து நிச்சயம் விடுபடுவேன். சி.பி.சி.ஐ.டி, போலீஸ் காவலில் நான் இருந்தபோது என்னை யாரும் துன்புறுத்தவில்லை. என்னை மட்டுமல்ல, என்னை சார்ந்த அனைவருமே இந்த வழக்கினால் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பெரிய குழுவே கடந்த இரண்டு மாதமாக என்னை சிறையில் வைப்பதற்கான வேலையை செய்துள்ளார்கள். உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த வழக்கை கரூரில் உள்ளவர்களில் யார் செய்ய சொல்லி இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு உறுதுணையாக இருந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், வழக்கறிஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” இவ்வாறு எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முன்னதாக, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற விசாரணையில், 2 தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். காலை, மாலை என இருவேளைகளிலும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் ஜாமின் வழங்கிய நிலையில், இன்று மாலை திருச்சி மத்திய சிறையில் இருந்து எம்.ஆர் விஜயபாஸ்கர் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.