போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக ஆளும் தி.மு.க அரசைக் கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச் 12) அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறியுள்ளது. மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இங்கே வந்து போதைப்பொருளை கண்டுபிடிக்க முடிகிறது என்றால் நமது காவல்துறை என்ன செய்துகொண்டு இருக்கிறது.
ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“